Wednesday, March 28, 2007

தரிசனம் செய்யப்படும் இடங்கள்

ஸிரியா, இராக், எகிப்து போன்ற நாடுகளிலும், இவையல்லாத இன்னும் பல நாடுகளிலும் நாம் காணுகின்ற, கட்டப்பட்ட கப்றுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதனையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. கப்றின் மீது கட்டிடம் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளது பின்வருமாறு அமைந்துள்ளது.

'கப்றின் மீது சாந்து சுண்ணாம்பு பூசுவதையும், அதன் மீது அமர்வதையும், அதன் மீது கட்டிடம் கட்டுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' ஆதாரம்: முஸ்லிம்

மேற்காட்டிய ஹதீஸில் வந்த 'தஜ்ஸீஸ்' என்ற அரபு வார்த்தைக்கு சாந்து அல்லது சுண்ணாம்புகளின் கொழுப்புக்களைப் பூசுதல் என்று பொருள்படும். இமாம் திர்மிதி (ரஹ்) அவர்களின் ரிவாயத் ஒன்றில் 'கப்றின் மீது எழுதப்படுவதையும் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்' என்று பதியப்பட்டுள்ளது. எழுதப்படுவது என்றால் அல்குர்ஆன் வசனம், ஹதீஸ் வாக்கியம், பாடல்கள், கப்றில் அடங்கியவரின் பெயர் போன்றவைகளாகும்.

ஸியாரத் செய்யக்கூடிய அதிகமான கட்டப்பட்ட கப்றுகள் முறையற்றனவாகவே இருந்து கொண்டிருக்கின்றன. ஹுஸைன் (ரலி) அவர்கள் இறாக்கில் ஷஹீதாகி அங்குதான் அடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்கள் மிஸ்ரு (எகிப்து)க்குச் செல்லவில்லை. அவர்களுடைய அடக்கஸ்தலம் மிஸ்ரில் இருப்பதாகச் சொல்லப்படுவது சரியானதன்று.

இவர்களுடைய பிழையான செயலுக்குரிய மற்றுமொரு சான்று யாதெனில் ஹுஸைன் (ரலி) அவர்களின் அடக்கஸ்தலம் இறாக், எகிப்து, ஸிரியா ஆகிய மூன்று நாடுகளிலும் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் ஷைகு அலாவுத்தீன் என்பவர் பதினான்கு இடங்களில் அடங்கியிருப்பதாக சில மக்கள் கருதுகின்றனர். இவ்வாறே ஷைகு தாவுது வலியுல்லாஹ்வும் எண்ணிலடங்காத இடங்களில் அடங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு இடத்திலும் அவர் கராமத்துக் (அற்புதம்) காட்டுகிறார் என்றும் கூறுகின்றனர். -- (மொழிபெயர்ப்பாளர்).

ஹுஸைன் (ரலி) அவர்களுடைய கப்றைப்பற்றி மக்கள் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைக்கு எதிரான மற்றுமொரு சான்று 'ஸஹாபாக்கள் மரணித்தால் நபி (ஸல்) அவர்களின் பின்வரும் சொல்லுக்கமைவாக பள்ளிவாசலினுள் அடக்கம் செய்யப்பட மாட்டார்கள்' என்பதாகும்.

'அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபிப்பானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்' ஆதாரம்: புகாரி

இவ்வாதாரத்தைக் கொண்டு ஸஹாபாக்களுடைய காலத்தில் மரணித்த எந்த ஸஹாபியும் பள்ளிவாசலினுள் அடக்கம் செய்யப்பட்டிருக்க முடியாது. இதனுடைய விளக்கம் என்னவெனில், அக்காலத்தில் இருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் ஷிர்க் இல்லாத வழிபாட்டுத் தலங்களாக இருந்தன. அந்த ஸஹாபாக்கள் பின்வரும் மறைவசனத்தைக் கற்று அதன்படி செயல்படுகின்றவர்களாக இருந்தனர்.

"நிச்சயமாக மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வி(ன் வணக்கத்தி)ற்காகவே உள்ளன. ஆகவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (வணங்க, பெயர் கூறி) அழைக்காதீர்கள்" (72:18)

நபி (ஸல்) அவர்கள் தான் கட்டிய பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படவில்லை; அவர்களது வீட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இது நம்மிடையே உள்ள மிக உறுதியானதோர் ஆதாரமாகும். உமையாக்கள் தமது ஆட்சிக்காலத்தில் மஸ்ஜிதுந்நபவியை விசாலப்படுத்திய போது, அவர்கள் தான் நபியவர்களின் கப்றைப் பள்ளிவாசலினுள் உட்படுத்தினார்கள். அவர்கள் இவ்வாறு செய்யாதிருந்திருக்கலாம்.

இப்பொழுது ஹுஸைன் (ரலி) அவர்களின் கப்று பள்ளிவாசலினுள் இருக்கின்றது. (பிற்காலத்தவர்கள் கப்றைப் பள்ளிவாசலாக மாற்றி இருக்கலாம்.) சிலர் அதனைத் 'தவாப்' செய்கின்றனர். நோயைக் குணப்படுத்தல், கஷ்டங்களை நீக்குதல் போன்ற அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கத் தகுதியான சில தேவைகளை ஹுஸைன் (ரலி) அவர்களிடம் கேட்கின்றனர். நமது மார்க்கமோ, இவற்றை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்குமாறும், கஃபத்துல்லாவைத் தவிர வேறெதனையும் வலம் வரக் (தவாப் செய்யக்) கூடாதென்றும் நமக்குக் கட்டளை இடுகின்றது. தவாப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

"அவர்கள் புராதன ஆலயத்தை (கஃபாவை)த் 'தவாப்' செய்யவும்" (22:29)

அலி (ரலி) அவர்களின் மகள் ஜைனபு (ரலி) அவர்களின் 'கப்று' மிஸ்ரிலும், டமாஸ்கஸ்ஸிலும் இருப்பதாகச் சொல்லுவது சரியானதன்று. அவர்கள் மிஸ்ரில் மரணிக்கவுமில்லை; ஸிரியாவில் மரணிக்கவுமில்லை. அவ்விரு இடங்களில் அவர்கள் பெயரில் கப்றுகள் இருப்பதே, அதனை நம்புகின்ற மக்களுடைய கொள்கை பிழையானது என்பதற்கு ஆதாரமாகும்.

உண்மையாகவே கப்றில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும், கப்றுகளின் மீது கட்டிடம் கட்டி, அவற்றைப் பள்ளிவாசலினுள் அமைப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது. இறாக்கில் ஹுஸைன் (ரலி) அவர்களுடைய கப்றும், முஸ்ரில் இமாம் ஷாபி (ரஹ்) அவர்களுடைய கப்றும், பக்தாதில் அப்துல்காதிர் ஜிலானிய்யி (ரஹ்) அவர்களுடைய கப்றும் இவர்களல்லாத பலருடைய கப்றுகளும் பள்ளிவாசல்களினுள் இருப்பதைக் காணலாம்.

'ஷைக் ஸாதிக்' என்பவர் பின்வருமாறு என்னிடம் ஒரு சம்பவத்தைக் கூறினார். ஒரு மனிதர் கிப்லாத் திசையை நோக்கித் தொழாமல் (முஹ்யித்தீன்) அப்துல் காதிர் ஜீலானிய்யி அவர்களுடைய கப்றை நோக்கித் தொழுது கொண்டிருந்தார். அவரை நோக்கி, கிப்லாவை முன்னோக்கித் தொழுவது 'பர்ளு' என்றும் 'கப்றுகளின் மீது கட்டிடம் கட்டவோ, அவற்றை நோக்கித் தொழவோ வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றும் நான் செய்த உபதேசத்தைச் செவியேற்காதவரைப் போன்று என்னை நோக்கி 'நீ ஒரு வஹ்ஹாபி' என்று சொன்னார்.

மிஸ்ரிலே கட்டாப்பட்ட அதிகமான கப்றுகள் 'பாதிமிய்யா' ஆட்சிகாலத்தில் நிருவப்பட்டனவாகும். இமாம் இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் இதனைத் தனது அல்-பிதாயா வந்-நிஹாயா என்ற நூலில் பாகம்-1, பக்கம் 346-ல் கூறியுள்ளார்கள்.

இறை நிராகரிப்பாளர்கள், பாவிகள், கொடுமைக்காரர்கள், நாத்திகர்கள், அல்லாஹ்வுடைய ஸிபத்துகளை மறுக்கின்றவர்கள், இஸ்லாத்தையே மறுக்கின்றவர்கள், நெருப்பு வணக்கத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் போன்ற காஃபிர்கள் பள்ளிவாசல்களில் ஐங்காலமும் தொழுதுவரும் முஸ்லிம்களின் கூட்டங்களை கண்டு பயந்தனர்; திடுக்குற்றனர்; இவர்களோ தொழுவதுமில்லை. ஹஜ் செய்வதுமில்லை. முஸ்லிம்கள் மீது கடுமையான பொறாமைக் கொள்பவர்களாக இருந்தனர்.

இவர்கள், முஸ்லிம்களைப் பள்ளிவாசல் தொடர்பிலிருந்து திசை திருப்புவதைப் பற்றி சிந்தித்தனர். எனவே கப்றுகளின் மீது குப்பாக்களையும் மனாராக்களையும் கட்டி அலங்கரித்தனர். அவை ஒவ்வொன்றினுள்ளும், ஹுஸைன் (ரலி), அவர்களின் சகோதரி ஜைனப் (ரலி) போன்றோர் இருப்பதாக மக்களை நம்ப வைத்தனர். அவற்றின் பக்கம் மக்களைத் திசை திருப்புவதற்காக, அவற்றில் பல விழாக்களை ஏற்படுத்தினர். தங்கள் பக்கம் மக்களைக் கவரச் செய்வதற்காகத் தமக்குத்தாமே 'பாத்திமிகள்' என்று பெயர் சூட்டிக் கொண்டனர்.

பின்னர் முஸ்லிம்கள், தம்மைச் ஷிர்க்கில் ஆழ்த்திய இந்த பித்அத்துகளைப் பற்றிப் பிடித்தனர். அன்று அம்மக்கள் எதிரிகளிடமிருந்து தமது மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்கள் வாங்க வேண்டியிருந்தது; அவர்களது பொருளாதாரத்தை வளர்க்க வேண்டியிருந்தது. இவ்வாறான பிரயோசனமும் தேவையுமுடைய வழியில் பணத்தைச் செலவு செய்வதற்குப் பதிலாக மேற்கூறப்பட்ட கப்று வணக்கங்களுக்காகச் செலவு செய்தனர்.

முஸ்லிம்கள் தங்களது பணத்தை கப்றுகளின் மீது குப்பாக்கள் கட்டவும், வளைத்துச்சுவர் எழுப்பவும் தரிசனை ஏற்படுத்தவும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தப்பணம் இறந்தவர்களுக்கு எந்தப்பயனையும் அளிக்காது. 'கப்றுகளின் மீது கட்டிடம் கட்டுவதை இஸ்லாம் தடை செய்கின்றது' என்ற விஷயத்தை அறிந்த நிலையில், இந்தப்பணம் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டால் அது உயிருள்ளவர்களுக்கும் மரணித்தவர்களுக்கும் பயனளிக்கும்.

'எந்த ஒரு சிலையையும் அழிக்காமலும், சிறப்பளித்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு கப்றையும் (பூமியுடன்) தரை மட்டமாக்காமலும் விட்டுவிடாதே' என்று அலி (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

'அதாவது உயர்ந்திருக்கும் எந்த ஒரு கப்றையும் உடைக்காமல் விட்டுவிடாதே!' என்பது இதன் கருத்தாகும். நபி (ஸல்) அவர்கள் சிலையை எந்தளவு வெறுத்தார்களோ அதே அளவு கட்டப்பட்ட கப்றையும் வெறுத்தார்கள் என்பதை மேற்காட்டிய ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. கப்றை அடையாளம் கண்டு கொள்வதற்காக ஒரு சாணளவு உயர்த்துவதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கின்றது.

இறந்தவர்களுக்காகச் செய்யப்படும் நேர்ச்சைகள் அனைத்தும் பெரிய ஷிர்க்காகும். மேற்கூறப்பட்ட இடங்களில் வேலை செய்கின்றவர்கள், நேர்ச்சை செய்யப்பட்ட பணம், மற்றும் பொருட்களைப் பெற்று, பாவமான கருமங்களிலும் இச்சையைத் தீர்க்கும் வழிகளிலும் செலவு செய்கின்றனர். நேர்ச்சை செய்து அதனைக் கொடுத்தவனின் பாவச் செயல்களுக்குக்கூட இவர்கள் துணையாகின்றனர்.

இந்தப்பணம் 'ஸதகா' என்ற பெயரில் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் இதனால் பயனடைந்திருப்பர். இந்தத் தர்மத்தைப் பெற்றுக் கொண்டவன் தனது தேவைகளுக்கு இதனைப் பயன்படுத்துவான்.

அல்லாஹ்வே! நீ, உண்மையை உண்மையாகவே எங்களுக்குக் காட்டி, அதனை பின்பற்றுகின்றவர்களாகவும், அதிலே விருப்பம் கொள்ளக் கூடியவர்களாகவும் எங்களை ஆக்கி வைப்பாயாக! மேலும் தீமையை தீமையாகவே எங்களுக்குக் காட்டி, அதனை விட்டு விலகக் கூடியவர்களாகவும், அதிலே வெறுப்புக் கொள்ளக் கூடியவர்களாகவும் எங்களை ஆக்கி வைப்பாயாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

ஷிர்க் தோன்றக்கூடிய இடங்களில் சில....

இஸ்லாமிய உலகில் பரவியிருக்கும் ஷிர்க்குகள் வெளியாகக்கூடிய இடங்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களில் மாபெரும் துன்பமாகும். முஸ்லிம்களிடத்தில் தௌஹீதை முன்வைக்கின்றவர்கள் சந்திக்கும் சோதனைகள் கஷ்டங்கள் முதலானவைகளும். இதல்லாத இன்னும் பல நோவினைகளும் இதன் காரணமாகத்தான். முஸ்லிம்களிடத்தில் நம்பிக்கையிலும் நடத்தையிலும் ஷிர்க் வெளியாகின்றது.

அதிகமான முஸ்லிம் நாடுகளில் உள்ள ஷிர்க் நடைபெறக்கூடிய இடங்கள் இதற்குச் சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம். இதனை அதிகமான முஸ்லிம்கள் இஸ்லாம் என்றே கருதுகிறார்கள். இதனால்தான் 'இஸ்லாம் ஷிர்க்கை ஒழிப்பதற்காகவே வந்துள்ளது' என்பதை அறிந்திருந்தும், அந்த ஷிர்க்குகளை அவர்கள் மறுக்கிறார்களில்லை. அவர்கள் இஸ்லாம் என்று கருதிக் கொண்டிருப்பவற்றில் சில பின்வருமாறு:-

அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆக் கேட்டல்:- மௌலிது வைபவங்களில் படிக்கக்கூடிய கவிகள், பாட்டுக்கள் போன்றவற்றில் இது அமைந்துள்ளதைக் காணலாம். மக்கள் படிக்கின்ற பாடல்களைப் பின்வருமாறு செவிதாழ்த்தியுள்ளேன்.

'ரஸூல் மார்களுக்குத் தலைவரே! என்னைத் தாங்கிக் கொள்பவரே!
நீங்கள் தான் அல்லாஹ்வுடைய வாசலும் நான் நம்பிக்கை வைக்கத் தகுதியுள்ளவரும் ஆவீர்கள்.

ரஸூலுல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் என்னைக் கை தாங்குங்கள்.

சமூகமளிப்பவர்களில் தலைவரே! எனது துன்பத்தை உங்களைத் தவிர வேறெவரும் மாற்றமாட்டார்.

இவ்வாறான ஒன்றை (நபியவர்களால் தனது மௌத்துக்குப் பின்னால் செவிதாழ்த்த முடியாது, அவ்வாறு) நபியவர்கள் செவிதாழ்த்தினாலும் இதனைவிட்டு நீங்கியே இருப்பார்கள். ஏனென்றால் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவரும் கஷ்டத்தை, இலகுவானதாக மாற்ற முடியாது.

இதுபோலவே பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் இப்படியான பாடல்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். அவற்றிலே (மௌத்துக்குப்பின் மறுமை ஏற்படுவதற்கிடையில்) எந்தவித உதவியும் செய்யச் சக்தியற்ற ரஸூல்மார்கள், நபிமார்கள், அவுலியாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரிடம் உதவி கேட்பதாகவும் அமைந்துள்ளது.

பள்ளிவாசல்களில் அவுலியாக்கள் நல்லடியார்கள் ஆகியோர்களை அடக்கம் செய்தல்:- முஸ்லிம்கள் வாழுகின்ற அதிகமான பகுதிகளிலுள்ள சில பள்ளிவாசல்களினுள் கப்றுகள் இருப்பதைக் காணலாம். அவற்றின் மீது கட்டிடங்கள் கட்டி, குப்பாக்கள் (கோபுரங்கள்) கட்டப்பட்டுள்ளன. அவற்றில் அடக்கம் செய்யப்பட்டிருப்போரிடம், சிலர் தமது தேவைகளைக் கேட்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் இதனைப் பின்வருமாறு கூறித் தடைசெய்துள்ளார்கள்.

'அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபிப்பானாக! அவர்கள் தமது நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக எடுத்துக் கொண்டனர்'. ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

பள்ளிவாசல்களினுள் நபிமார்களை அடக்கஞ்செய்வதையே இஸ்லாம் அனுமதிக்கவில்லையென்றால், மஷாயிகுகள், உலமாக்கள் போன்றோர்களை அடக்கஞ்செய்வது எவ்வாறு அனுமதிக்கப்படும்? அல்லாஹ்விடம் கேட்கவேண்டியதை, அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கேட்பது ஷிர்க் என்பதையும், மரணித்தவர்களைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பதை இஸ்லாம் தடை செய்கின்றது என்பதையும் மக்கள் நன்கறிந்துகொண்டே அவுலியாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரைப் பள்ளிவாசல்களினுள் அடக்கம் செய்கின்றனர்,

அவுலியாக்களுக்காக நேர்ச்சை செய்தல்:- சில மனிதர்கள் குர்பானிக்குரிய ஒரு மிருகத்தையோ அல்லது பணத்தையோ, அதல்லாத வேறு பொருட்களையோ தனக்கு விருப்பமான ஒரு குறிப்பிட்ட 'வலி' (அல்லாஹ்வுடைய நேசனு)க்காக நேர்ச்சை செய்கின்றனர். இந்த நேர்ச்சை ஷிர்க்காகும். இதனை நிறைவேற்றாமலிருப்பது கடமையாகும். ஏனென்றால் நேர்ச்சை ஓர் 'இபாதத்'. இது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

"(மூமின்களாகிய) அவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளை நிறைவேற்றி வைக்கின்றனர். நீண்ட வேதனையுடைய நாளைக்கும் பயப்படுகின்றனர்" (76:7)

அறுக்கின்றபோது அல்லாஹ்வுக்காக என்று 'நிய்யத்' வைத்தாலும் இந்தச்செயல்பாடு இணைவைப்பவர்களின் செயல்பாட்டைத் தழுவியதாகும். அவர்கள் தங்களுடைய நேர்ச்சைகளைத் தங்களது சிலைகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடங்களில் வைத்தே நிறைவேற்றுவார்கள். இதற்கொப்பாகவே முஸ்லிம்கள், தங்களது அவுலியாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடங்களில் நிறைவேற்றுவார்கள். இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

'அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிடுகின்றவனை அல்லாஹ் சபிக்கிறான்' ஆதாரம்: முஸ்லிம்.

முஹ்யித்தீன் அப்துல்காதிர் - அல்ஜீலானிய்யீ, ரிபாஈ, பதவி (ரஹ்-ஹிம்) ஹுஸைன் (ரலி) போன்றோரின் கப்றுகளை 'தவாப்' செய்தல்:- இவர்களின் கப்றுகளை மக்கள் 'தவாப்' (வலம் வருதல்) செய்கின்றனர். தவாப் என்பது ஓர் 'இபாதத்'தாகும். அல்லாஹ்வுடைய கட்டளைக்கமைய கஃபத்துல்லாஹ்வைச் சூழ மட்டுமே தவாப் செய்ய வேண்டும். வேறெந்த ஒன்றையும் 'தவாப்' செய்யக்கூடாது. குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

"அவர்கள் புராதன ஆலயத்தை (கஃபத்துல்லாவை)த் 'தவாப்' செய்யவும்" (22:29)

கப்றுகளை நோக்கித் தொழுவது அனுமதிக்கப்பட்டதல்ல:- இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

'கப்றின் மீது அமரவோ, அதனை நோக்கித் தொழவோ வேண்டாம்' ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்களுடைய பின்வரும் சொல்லுக்கமைவாக 'பரக்கத்'தை நாடிக் கப்றடிகளுக்கு யாத்திரை மேற்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.

'மூன்று பள்ளிவாசல்களுக்கன்றி (வேறெந்த இடத்திற்கும் நேர்ச்சை செய்து) யாத்திரை மேற்கொள்ளக் கூடாது. ஒன்று: மஸ்ஜிதுல் ஹறாம் (கஃபத்துல்லாஹ்). இரண்டு: எனது இந்தப் பள்ளிவாசல் (மஸ்ஜிதுந்நபவி). மூன்று: மஸ்ஜிதுல் அக்ஸா என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

நாம் மதினா செல்ல விரும்பினால், (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) மஸ்ஜிதுந்நபவியைத் தரிசிப்பதற்காகவும், (அதன் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ள) நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்வதற்காகவும் செல்கிறோம் என்று சொல்லுவது சரியான சொல்லாகும்.

குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணாக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது சரியானதென்று நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதிருப்பது, குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்பட்டவற்றைக் கொண்டு தீர்ப்பளிப்பது போன்றாகும்.

இதற்கு உதாரணம் சில மஷாயிகுகள் வெளியாக்கும் மார்க்கத்தீர்ப்புக் (பத்வாக்)கள் போன்றாகும். இவை, இஸ்லாத்தின் மூலகருத்துக்களுக்கு முரண்படுகின்றன. இது, எதிர்த்துப் போராடவேண்டுமென அல்லாஹ் பிரகடனப்படுத்திய பாவச்செயலான வட்டியை ஆகுமென்று கூறுவது போன்றாகும்.

குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படுகின்றவாறு கட்டளை பிறப்பிக்கின்ற, அதிகாரிகள், அறிஞர்கள், உலமாக்கள், மஷாயிகுகள் போன்றோருக்கு வழிபடுதல்:- நபி (ஸல்) அவர்களுடைய சொல்லுக்கமைவாக, இது வழிபாட்டில் ஷிர்க்காகும்.

'படைத்தவனுக்கு மாறுசெய்யும் வகையில் படைக்கப்பட்டவனுக்கு வழிபடக்கூடாது' ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

இதுபற்றி அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகின்றான். "அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹை (ஈஸாவை)யும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே, அவர்கள் (யாவரும்) ஏவப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ்வையன்றி வேறெந்த நாயனுமில்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்" (9:31)

இவ்வசனத்துக்கு ஹுதைபா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள். 'யூதர்களிலுள்ள அறிஞர்கள் ஹலாலாக்கியதையும், அவர்கள் ஹறாமாக்கியதையும் சரியென ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வழிபடுவது கொண்டு 'இபாதத்' செய்வதே மேற்படி வசனத்தின் கருத்தாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

சிறிய ஷிர்க்கும் அதன் வகைகளும்

இஸ்லாம் அனுமதிக்காத வஸீலாக்கள் அனைத்தும் பெரிய ஷிர்க்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும். இது இபாத(வணக்க)த்தின் அந்தஸ்தை அடையாது. இதனைச் செய்தவனை அது இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி விடாது. எனினும் இது பெரும்பாவங்களில் அடங்கும்.

இலேசான முகஸ்துதி:- (நன்மையானவற்றைப்) படைப்புகளுக்காகச் செய்தல், அல்லாஹ்வுக்காக வணக்கத்தைப் புரிந்து அவனுக்காகவே தொழுகின்ற ஒரு முஸ்லிம் தனது வணக்கங்களையும், தொழுகையையும் மனிதர்கள் புகழ வேண்டும் என்பதற்காகச் செய்தல் போன்றவை சிறிய ஷிர்க்கில் அடங்கும். இதுபற்றி பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

"எவன் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறானோ, அவன் நற்கருமங்களைச் செய்து, தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவானாக!" (18:110)

நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க்கைப் பற்ற்ப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

'உங்களிடத்தில் நான் அதிகமாகப் பயப்படுவதெல்லாம் சிறிய ஷிர்க்காகும். அதுதான் 'ரியா' (முகஸ்துதி) மறுமைநாளில் அல்லாஹ், மனிதர்களிடத்தில் கூலியை எதிர்பார்க்கின்றவர்களை நோக்கி, 'எவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக உலகில் அமல்கள் செய்தீர்களோ, அவர்களிடமே இப்பொழுது கூலியை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறுவான்'. ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்தல்:- 'எவன்
அல்லாஹ் அல்லாதவனைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ, அவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

அல்லாஹ் அல்லாதவனைக் கொண்டு சத்தியம் செய்தல் சிலவேளை பெரிய ஷிர்க்காகிவிடும். உதாரணமாக, 'வலி'க்கு சில ஆற்றல்கள் உண்டு; அவரைக் கொண்டு பொய்ச்சத்தியம் செய்தால் சத்தியம் செய்கின்றவனுக்கு தீங்கு ஏற்படும் என்று சத்தியம் செய்யும் ஒருவன் நம்புவானென்றால் இது பெரிய ஷிர்க்காகும்.

மறைவான ஷிர்க்கு:- உதாரணத்துக்கு, அல்லாஹ்வும் இன்ன மனிதனும் நாடினால் என்று சொல்லுவது போன்று. (இவ்வாறு சொல்லுவது தடை
செய்யப்பட்டுள்ளது) அல்லாஹ் இல்லையென்றால், பின்பு இன்னவர் இல்லையென்றால் என்று சொல்வது அனுமதிக்கத் தக்கது.

'அல்லாஹ்வும் இன்னமனிதனும் நாடினால் என்று நீங்கள் கூறாதீர்கள். அல்லாஹ்வும் பின்பு இன்னமனிதனும் நாடினால் என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.