Saturday, March 28, 2009

ஈமானுடைய கிளைகளும், குஃப்ருடைய கிளைகளும்

1. சொல், செயல், விசுவாசம் என்று ஈமானுக்கு மூன்று கிளைகள் உண்டு. ஈமானென்றால் நாவினால் மொழிந்து, உள்ளத்தினால் உறுதிகொண்டு, உறுப்புகளினால் செயல்படுத்துவதாகும்.

நாவினால் மொழிவதென்றால் இஸ்லாத்தின் கலிமாவான 'லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற வாக்கியத்தை மொழிவதாகும். உள்ளத்தின் செயல்பாடென்றால் அதன் எண்ணம் அதனைத் தூய்மைப்படுத்தல் என்றும், உறுப்புகளைக் கொண்டு செயல்படுத்தல் என்றும் இருவகைப்படும்.

ஒருவனிடமிருந்து இம்மூன்று வகையும் நீங்கிவிட்டால், அவனிடமிருந்து இஸ்லாம் பூரணமாகவே நீங்கிவிடும். உள்ளத்தால் உண்மைப்படுத்தும் பகுதி அவனிடமில்லை என்றால் மீதமுள்ள இரண்டு கிளைகளாலும் எந்தவிதப் பயனுமிராது.

2. செயல்பாட்டினால் 'குஃப்ர்' என்றும், மறுப்பதினால் 'குஃப்ர்' என்றும் 'குஃப்ர்' இருவகைப்படும். மறுத்தல் என்பது எல்லாவகையிலும் ஈமானுக்கெதிராகவே இருக்கும். செயல்பாட்டைக் கொண்டு ஏற்படும் குஃப்ர், ஈமானுக்கு முரண்பட்டதென்றும், முரண்படாததென்றும் இருவகைப்படும்.

சிலைக்கு ஸுஜூது செய்தல், குர்ஆனை இழிவுபடுத்தல், நபிமார்களைத் திட்டுதல், மார்க்கத்தைப் பரிகசித்தல் போன்றவை ஈமானுக்கு முரண்படுவதாகும். அல்லாஹ் அருளாததைக் கொண்டு தீர்ப்பளித்தல், அலட்சியமாகத் தொழுகையை விடுதல் போன்றவை ஈமானுக்கு முரண்படாத செயல்ரீதியான குஃப்ராகும். குஃப்ரை வருத்தக்கூடிய செயல்ரீதியான குஃப்ருக்கு ஓர் உதாரணம் பின்வரும் நபிமொழியாகும்.

'ஒரு முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும்' ஆதாரம்: புகாரி

(நடைமுறைப்படுத்த வேண்டிய இஸ்லாமிய நடைமுறைகளை செயல் படுத்தாமலிருக்கும்) செயல்முறையான குஃப்ர் எவரையும் மார்க்கத்தை விட்டு வெளியாக்கி விடாது. அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் மார்க்கமாக்கிய செயல்முறையான கடமைகளைச் செய்யாமல் ஈமானுடன் இருக்கும் நிலையையே இது குறிக்கும்.

3. ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஈமான், குஃப்ர், ஷிர்க், தௌஹீத், இறையச்சம், பாவம் செய்தல், நயவஞ்சகத்தனம், இறைவிசுவாசம் போன்றவை சிலவேளை மனிதனிடத்தில் ஒன்றுசேரும். ஒருவனை முஃமின் என்று சொல்வதற்கு ஈமானின் கிளைகளில் ஒருகிளை இருந்தால் போதாது. அவன் ஈமானுடன் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் சரியே.

4. நபி (ஸல்) அவர்களுடைய பின்வரும் சொல்லுக்கமைவாக ஷிர்க்கும் குஃப்ரும் பொதுவான நிலையில் கணிக்கப்படும்.

'எங்களுக்கும் (முஸ்லிமல்லாத) அவர்களுக்கும் இடையிலுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். எவன் அதனை விடுகிறானோ அவன் காஃபிராவான்' ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

செயல்ரீதியான ஈமானுக்கு செயல்ரீதியான குஃப்ர் எதிரானதாகும். நம்பிக்கை ரீதியான ஈமானுக்கு நம்பிக்கை ரீதியான குஃப்ர் எதிரானதாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.