Showing posts with label சபை. Show all posts
Showing posts with label சபை. Show all posts

Saturday, April 18, 2009

எழுந்து நிற்பதற்கு அவசியமானதும், அங்கீகரிக்கப்பட்டதும்

சமூகமளிப்பவருக்காக எழுந்து நிற்பதை ஆகுமாக்கக்கூடிய ஸஹீஹான ஹதீஸ்களும், ஸஹாபாக்களுடைய நடைமுறையுமுண்டு. அந்த ஹதீஸ்களை விளங்குவதற்காக எங்களுடன் வாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன்னிடத்தில் பாத்திமா (ரலி) அவர்கள் வந்தால் எழுந்து நிற்பார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றாலும், அவர்கள் எழுந்து நிற்பார்கள். இது அனுமதியுடையதும், தேவையானதுமாகும். ஏனென்றால் தன்னிடத்தில் வந்த ஒரு விருந்தாளியை சந்தித்து அவரை சங்கைப்படுத்துவதற்காக எழுந்து நிற்பதாகவே இது அமைகின்றது. நபி (ஸல்) அவர்களின் சொல் பின்வருமாறு அமைந்துள்ளது.

'எவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறானோ அவன் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தவும்' ஆதாரம்: முஸ்லிம்.

இங்கு எழுந்து நிற்றல் என்பது வீட்டுச் சொந்தக்காரர் மட்டும் செய்யும் ஒரு செயலாகும்.

'உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இந்த ஹதீஸ் கூறப்பட்ட காரணம் யாதெனில், ஸஃது (ரலி) அவர்கள் காயம் பட்டவர்களாக இருந்தார்கள். யஹூதிகளுக்கு மத்தியில் தீர்ப்பொன்று வழங்குவதற்காக அவரை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர் ஒரு கோவேறு கழுதையில் சென்று வந்தார். அவர் திரும்பி வந்து சேர்ந்தபோது, நபியவர்கள் அங்கிருந்த மதினாவாசிகளை நோக்கி 'உங்களுடைய தலைவரிடம் எழுந்து சென்று அவரை (வாகனத்திலிருந்து) இறக்கி விடுங்கள்' என்று கூறினார்கள். அப்பொழுது அவர்கள் எழுந்து சென்று அவரை இறக்கி விட்டார்கள்.

இந்த 'கியாம்' (எழுந்து நிற்றல்) மதினாவாசிகளின் தலைவரான ஸஃது (ரலி) அவர்களுக்கு உதவி செய்ய தேவைப்பட்டது. அவர்கள் காயம் பட்டவர்களாகக் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். அவர்களால் சுயமாக அதிலிருந்து இறங்க முடியாதிருந்தபோது, அவர்கள் விழுந்து விடாதிருப்பதற்காகவே, அவர்களை இறக்கி விடுமாறு அன்ஸாரிகளை நோக்கி மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்களோ, ஏனைய ஸஹாபாக்களோ எழுந்து நிற்கவில்லை.

நபி (ஸல்) அவர்களாலும், அவர்களுடைய உத்தரவின்பேரில் அவர்களது தோழர்களாலும் புறக்கணிக்கப்பட்டிருந்த கஃபு இப்னு மாலிக் (ரலி) அவர்கள் பள்ளிவாசலினுள் நுழையும்போது, அவருடைய தௌபாவை அல்லாஹ் அங்கீகரித்து வஹீ அறிவித்த செய்தியை, அவருக்கு சந்தோசத்துடன் அறிவிப்பதற்காக அங்கு அமர்ந்திருந்த ஸஹாபாக்களில் தல்ஹா (ரலி) அவர்கள் மட்டும் வேகமாகச் சென்று அறிவித்தார். கவலையுடனிருந்த ஒருவருடைய தௌபாவை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான் என்ற சந்தோசச் செய்தியை அறிவிப்பதற்காக இவ்வாறு எழுந்து செல்வது அனுமதிக்கப்படுகின்றது.

இங்கு கூறப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் உங்களது தலைவர், தல்ஹா (ரலி), பாத்திமா (ரலி) என்று குறிப்பாக வந்துள்ளது. அத்துடன் ஷைகுமார்கள், ஆசிரியர்கள் போன்றோருக்குச் செய்யும் சங்கையும் இதுவும் சமமாக மாட்டாது என்பதை நடைமுறை ரீதியாகக் காணலாம்.

மேலே கூறப்பட்ட ஹதீஸ்களைக் கவனித்துப் பார்த்தால், வீட்டிலுள்ளவர் அல்லது சபையிலுள்ளவர்களில் உதவிக்காச் சிலர், அல்லது சபையிலிருந்த ஒருவர் மட்டும் என்ற நிலையிலேயே எழுந்து கண்ணியப்படுத்தியுள்ளனர். ஆனால் ஷைகு அல்லது ஆசிரியர் (அல்லது அரசியல் தலைவர்) போன்றோருக்காக சபையிலுள்ளோர் அனைவரும் எழுந்து நிற்கின்றனர். இதனால் முன்னையதும் பின்னையதும் நோக்கம் ஒன்றல்ல; சமமானதல்ல என்பதைக் காணலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Friday, April 17, 2009

தடுக்கப்பட்ட 'கியாம்' (எழுந்து நிற்றல்)

'எவனொருவன் தனக்காக மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகிறானோ, அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

'ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்களை விட மிக விருப்பத்துக்குரிய எந்த ஒரு மனிதரும் இருக்கவில்லை. நபியவர்களைக் கண்டால் அவர்கள் (மரியாதைக்காக) எழுந்து நிற்க மாட்டார்கள். நபியவர்கள் இதனை வெறுப்பதனாலேயே அவ்வாறு எழுந்து நிற்க மாட்டார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

எந்த ஒரு மனிதன் தனக்கு மரியாதை செய்வதற்காக தான் செல்லுமிடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகிறானோ, அவன் நரகம் பிரவேசிப்பதற்கு இந்த செயல் காரணமாய் அமைகின்றது.

ஸஹாபாக்களைப் பொறுத்தமட்டில், நபி (ஸல்) அவர்களை மிகக் கடுமையாக நேசிக்கின்றவர்களாக இருந்தார்கள். இவ்வாறு இருந்தும் அவர்கள் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு நபியவர்கள் சமூகந்தந்தால், எழுந்து நிற்க மாட்டார்கள். இதனை நபியவர்கள் வெறுத்ததனாலேயே அவ்விதம் செய்யாதிருந்தார்கள்.

ஜனங்கள் சில மனிதர்களுக்காக எழுந்து நின்று மரியாதை செய்வதை வழமையாக்கிக் கொண்டுள்ளார்கள். ஒரு ஷைக் பாடம் நடத்துவதற்காகப் பிரவேசித்தால், அல்லது ஒரு இடத்தைத் தரிசிக்க சென்றால், இவ்வாறே ஒரு ஆசிரியர் மாணவர்களிடத்தில் நுழைந்தால் மாணவர்கள் உடனடியாக எழுந்து நிற்க வேண்டும் என்பதை வழமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். எவரேனும் அவ்வாறு எழுந்து நிற்கத் தவறினால், அவர் மரியாதைக் குறைவாக நடந்துக் கொண்டார் என்று கூறி, இழிவுபடுத்தப்படுவார்; அதட்டப்படுவார்.

ஷைஹ் அல்லது ஆசிரியர் ஜனங்கள் தமக்காக எழுந்து நிற்கும் போது, இதனைத் தடுக்காது மௌனமாக இருப்பதும், அல்லது எழுந்து நிற்கத் தாமதமாகின்றவர்கள் இழிவாகக் கருதப்படுவதும், ஆசிரியரும் ஷைகும் தமக்காக எழுந்து நின்று மரியாதை செய்வதை விரும்புகிறார்கள் என்று கருத இடமுண்டு. இதன் மூலம் இவர்கள் நரகில் பிரவேசிப்பதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

தமக்காக எழுந்து நிற்பதை இவர்கள் விரும்பவில்லை என்றால், அல்லது வெறுப்பார்களென்றால் எழுந்து நிற்பவர்களுக்கு இதனால் ஏற்படும் தீய விளைவுகளைக் கற்றுக் கொடுத்திருப்பார்கள்; அல்லது எழுந்து நிற்பதைத் தடுத்திருப்பார்கள். எழுந்து நிற்பதைத் தடைசெய்யும் ஹதீஸ்களை விளக்கியிருப்பார்கள்.

உள்ளே பிரவேசிக்கின்றவர்களுக்காகவோ, அறிஞர்களுக்காகவோ எழுந்து நின்று மரியாதை செய்கின்றவர்கள், ஷைத்தானுக்கு உதவுகின்றவர்களாகவே இருக்கின்றனர். 'நீங்கள் உங்கள் சகோதரனுக்கு எதிரான முறையில் ஷைத்தானுக்கு உதவுகின்றவர்களாக இருக்காதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: புகாரி

'நாங்கள் ஆசிரியர்களுக்காகவும், ஷைகுமார்களுக்காகவும் எழுந்து நிற்பதெல்லாம் அவர்கள் கற்ற கல்விக்கு மரியாதை செய்வதற்காகும்' என்று சிலர் கூறுகின்றனர். அவர்களை நோக்கி நாம் பின்வருமாறு கேட்க விரும்புகிறோம். நீங்கள் நபி (ஸல்) அவர்களுடைய அறிவில் சந்தேகிக்கின்றீர்களா? அவர்களுடைய தோழர்கள் நபியவர்களுக்கு அளித்த மரியாதையில் சந்தேகிக்கின்றீர்களா? நபியவர்கள் வரும் போதெல்லாம் அவர்கள் எழுந்து நிற்கவில்லை. ஏனென்றால் எழுந்து நிற்பதை மரியாதை என்று இஸ்லாம் கணிக்கவில்லை. நபியவர்களுக்கு வழிபடுதல், அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுபடுதல், ஸலாம் சொல்லல், முஸாபஹா (கைலாகு) செய்தல் போன்றவற்றையே இஸ்லாம் மரியாதை என்று கணிக்கின்றது.

நாங்கள் ஒரு சபையில் அமர்ந்திருக்கும் போது ஒரு செல்வந்தார் நுழைந்தால், ஜனங்கள் அவருக்காக எழுந்து நிற்பார்கள். அதேவேளை ஓர் ஏழை நுழைந்து விட்டாலோ, அவருக்காக எவரும் எழுந்து நிற்பதில்லை. இந்த நடைமுறை, அந்த ஏழைக்கு செல்வந்தன் மீதும், சபையில் இருப்பவர்கள் மீதும் குரோத மனப்பான்மையொன்றை ஏற்படுத்தி விடுகின்றது. இங்கு இஸ்லாம் தடைசெய்த பாரபட்சம் முஸ்லிம்களுக்கிடையில் ஏற்பட்டு விடுகின்றது. எழுந்து நின்று மரியாதை செய்ததே இதற்குக் காரணமாய் அமைகின்றது.

சிலவேளை மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்யாத அந்த ஏழை அல்லாஹ்விடத்தில், அந்தச் செல்வந்தனை விட அந்தஸ்தில் உயர்வாக இருக்க இடமுண்டு. இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

"உங்களில் எவன் மிகவும் பயபக்தியுடையவனாக இருக்கிறானோ, அவன்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியவானாவான்" (49:13)

'உள்ளே பிரவேசிக்கின்றவனுக்காக சபையிலுள்ளோர் எழுந்து நின்று மரியாதை செய்யாவிட்டால், அவன் அமர்ந்திருப்பவர்களைப் பற்றி ஏதாவது நினைக்க இடமுண்டு' என்று சிலவேளை ஒருவன் சொல்லலாம். சமூகம் கொடுப்பவனுக்கு நாங்கள் பின்வருமாறு விளக்கமளிப்போம்.

அவர்மீது நாங்கள் கொண்டிருக்கும் நேசமெல்லாம் எமது உள்ளங்களிலுண்டு. நாங்களோ, தனக்காக எழுந்து நின்று மரியாதை செய்வதை வெறுக்கக் கூடியவர்களாயிருந்த நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறோம். அவர்களுக்காக எழுந்து நிற்காத ஸஹாபாக்களைப் பின்பற்றுகிறோம். சபைக்கு சமூகமளிப்பவர் (இந்தச் செயலின் மூலம்) நரகம் பிரவேசிப்பதை வெறுக்கிறோம்.

சில ஷைகுமார்கள் 'கண்ணியத்துக்குரிய நபி (ஸல்) அவர்களுக்காக எழுந்து நிற்பது என் மீது கட்டாயமானதாகும்' என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் பாடியதாக ஒரு கவிதையைக் கூறுவார்கள். இது சரியான ஆதாரமுடையதன்று.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.